5 ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்

நேற்று 06/09/2021 காலை அன்வேர்ப்பன் மாநகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து பெரும் எழுச்சியோடு மனித நேய ஈருருளிப்பயணம் புருசல் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி ஆரம்பமானது.

பிற்பகல் நெடுந்தூரப் பயணத்தின் பின்னர் பல மனித நேய செயற்பாட்டாளர்களின் பங்களிப்போடு கொக்கெல்பெர்க் மாநகரசபை முதல்வரிடமும் ஐரோப்பிய ஒன்றியம், வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை ஐக்கிய நாடுகள் அவையிடம் வலியுறுத்த வேண்டும் என்பதோடு தமிழின அழிப்பின் சான்றுகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டு இணைய வழி ஊடாக கலந்துரையாடலும் நிகழ்ந்தது. சம நேரத்தில் வாழிட மொழிகளில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதன் அவசியத்தினையும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்லின வாழ் மக்களுக்கு எடுத்துரைத்து தமிழர்களின் நீதிக்கான கோசங்களினையும் எழுப்பியவாறு நடைபெற்றது.

தொடர்ந்தும் வாவ்ற் மாநகரசபையில் சுடுபானம், குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகளின் உபசரிப்போடு நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் பெல்சிய தமிழர் ஒருங்கிணைப்புகுழு பொறுப்பாளர் திரு நாதன் அண்ணையும் கலந்து கொண்டார். மீண்டும் எம் பயணம் இலக்கு நோக்கி நகர மாவீரர்களின் துணையோடு ஆயத்தம் ஆகின்றது.

“எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது”-தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு