8ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது. நேற்று 14/02/2021 ஜேர்மன் நாட்டின் எல்லை அருகாக பிரான்ஸ் சார்குமூர்ன் மாநகரத்தினை வந்தடைந்து மாநகரின் உதவி நகரபிதா, நகரசபை உறுப்பினர்களையும் சந்தித்ததுடன், தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 12ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால் மனு கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சார் யூனியன் மாநகரின் நகரபிதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியல் சந்திப்பை மேற்கொண்டிருந்தது. அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில் பத்திரிகையுடனான முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ந்த ஈருருளிப் பயணம் சார்யூனியன் மாநகர சபை முதல்வரைச் சந்தித்ததுடன் மனுவும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து Phalsbourg மாநகரை வந்தடைந்தது ஈருருளிப் பயணம்.

நாளை ‪16/02/2022 அன்று Strasbourg மாநகரை வந்தடையவுள்ளது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப் பயணம். பிற்பகல் 3 மணியளவில் Strasbourg மாநகரத்தின் மத்திய பகுதியில் உள்ள Place Kleber (Homme de fer) என்னும் இடத்தில் கவனயீர்ப்பு நிகழ்வும் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே எமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”

உங்கள் கவனத்திற்கு