வரலாற்றுத் துரோகத்தை எதிர்க்கும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே!
உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம் சமரசமின்றிப் போராடிவருகின்றோம். பிராந்திய வல்லரசான இந்தியாவின் நலன் சார்ந்தும் ஈழத்தமிழர்களின் அங்கீகாரம் பெறப்படாமலும் உருவாக்கப்பட்டதுமான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாகிய ஒற்றையாட்சி அரசியல்யாப்பில் இணைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தை எமது தேசம் என்றோ நிராகரித்திருந்த நிலையில், இன்று எமது மக்களின் ஆணைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீறி எமது மக்களின் இறைமையை கையொப்பமிட்டு விலைபேசும் அப்பட்டமான துரோகச்செயலை எமது தேசம் என்றும் ஏற்கப்போவதில்லை.
எமது தாயக மக்களின் உரிமைக்கான குரலொலி சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடக்குமுறைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளதையும் அவர்களின் பொருளாதார வாழ்வியல் சிதைக்கப்பட்டுள்ளதையும் இணக்க அரசியலிற்குள் விலைபோன நீங்கள் சாதகமாகப் பயன்படுத்தி, எமது மக்களின் அரசியல் உரிமையை நிராகரிக்கும் தேசத்துரோகச் செயலில் கையொப்பமிட்டதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் இன்றும் தமிழின அழிப்பை மேற்கொண்டு எமது இனத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக எழுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் தமிழின அழிப்பிற்கான நீதிகோரலையும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்குள் ஒடுக்க கையொப்பமிட்ட இரா.சம்மந்தன் (MP-TNA), மாவை சேனாதிராஜா (ITAK,TNA), சீ.வீ.விக்னேஸ்வரன் (MP-TMK,TMTK), செல்வம் அடைக்கலநாதன் (MP-TELO,TNA), தர்மலிங்கம் சித்தார்த்தன் (MP-DPLF,TNA), சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF,TMTK) ந.சிறீகாந்தா (TNP,TMTK) ஆகியோரதும் அவர்களது கட்சிகளினதும் வரலாற்றுத் துரோகத்தை என்றும் எமது மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.
எமது போராட்ட வரலாற்றில் ஈழத்தீவின் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழீழத் தாயகத்திற்காக எமது பல்லாயிரம் மக்களும் மாவீரர்களும் உயிர்த்தியாகம் செய்தார்கள். போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து முள்ளிவாய்க்காலில் ஆயுத மௌனிப்புவரை, இந்திய ஆக்கிரமிப்பு உட்பட எண்ணற்ற பேரழிவுகளையும் துரோகங்களையும் எமது மக்கள் சந்தித்திருந்தபோதும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தேசநலன் கருதி உங்களின் கடந்தகால வரலாற்றுத் துரோகங்களுக்கு அப்பால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதற்காகவே தங்களை இணைத்திருந்தார் என்பதை எமது மக்கள் நன்கறிவர். தேர்தல் விஞ்ஞாபனங்கள் மூலம் தேசியம், சுயநிர்ணயம், சமஸ்டி பேசி மக்களின் அங்கீகாரம் பெற்றுப் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிப்பதோடு, அன்னிய ஏகாதிபத்திய, பிராந்திய நலன்களை முன்நிறுத்திச் செயற்படும் முகவர்களாகவும் சுயலாபத்திற்காக இயங்கும் தேசத்துரோகிகளாகவும் எமது விடுதலை வரலாற்றில் மீண்டும் மீண்டும் உங்கள் துரோக முகங்கள் நிரூபணமாகிவருகின்றன.
தேசிய இனங்களின் விடுதலைக்கான குரலை எந்த சக்திகளாலும் துரோகங்களாலும் அடக்கவோ, வெல்லவோ முடிவதில்லை. எமது தாயக மக்கள் இவர்களின் போலித் தேசியவாதத்தைத் தோலுரித்துத் தேசத்தின் உரிமையை விரைவில் நிலைநாட்டுவார்கள். பல கட்சிகள் இணைந்து கையொப்பமிட்டுக் கோரும் 13ஆவது திருத்தத்தை அன்னிய, சிறிலங்கா அரசுகள் ஏகோபித்த தமிழ் மக்களின் சனநாயக விருப்பாகக்காட்டி சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சதிக்குள் எமது அரசியல் உரிமையை நிலைநிறுத்த முயலும் துரோக நடவடிக்கையை எதிர்த்துத் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து ஓரணியாக போராடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அத்தோடு கையொப்பமிட்டவர்களும் இவர்சார்ந்தவர்களும் நாம் வாழும் நாடுகளுக்கு வரும்போது காத்திரமான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவிப்பதோடு, வரலாற்றுப் பேராபத்திலிருந்து எமது தேசத்தை மீட்கும் போராட்டங்களில் பலமான அணியாக இணைந்து பங்கெடுக்குமாறு உரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2022/01/Screenshot_20220119_215734-717x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2022/01/Screenshot_20220119_215734-717x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2022/01/Screenshot_20220119_215754-724x1024.jpg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2022/01/Screenshot_20220119_215754-724x1024.jpg)